வருசநாடு: கடமலை-மயிலை ஒன்றியத்தில் பரமசிவன் கோவில் கண்மாய், சிறுகுளம் உள்ளிட்ட 8 கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்களை சார்ந்து பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தென்னை, முருங்கை உள்ளிட்ட விவசாயம் நடைபெற்று வருகிறது. கடமலை-மயிலை ஒன்றியத்தில் நிலத்தடி நீர்மட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இந்த கண்மாய்களுக்கு மூலவைகை ஆறு மற்றும் மேகமலை அருவியில் இருந்து வரத்து வாய்க்கால்கள் அமைக்கப்பட்டுள்ளன. எனவே மழைபெய்து ஆறு மற்றும் அருவியில் நீர்வரத்து ஏற்படும் நேரங்களில் கண்மாய்களில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படும்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கண்மாய்க்கு அமைக்கப்பட்டுள்ள வரத்து வாய்க்கால்களில் எந்தவித பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதன் காரணமாக வரத்து வாய்க்கால் முழுவதும் மரம், செடிகள் ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால் கண்மாய்களுக்கு நீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மழை பெய்யும் நேரங்களில் கண்மாய்களின் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து கண்மாய்களில் நீரை தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.