இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 3 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை: ராமேசுவரம் ராமநாத சுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 3 திருக்கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று(டிச.31ம் தேதி)  தொடங்கி வைத்தார்.

கோயில்களுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு உணவளிப்பதே அன்னதானத் திட்டமாகும். தற்போது இத்திட்டத்தில் 754 கோயில்களில் மதியவேளை அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில், பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது.

அத்திட்டத்தினை விரிவுபடுத்திடும் வகையில் தமிழக முதல்வர் கடந்த 2021ம் ஆண்டு செப்.16ம் தேதி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில், சமயபுரம் மாரியம்மன் கோயில், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயில் ஆகிய கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். 2022-23ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையின்போது, நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டம் ஏற்கனவே ஐந்து கோயில்களில் நடைபெற்று வருகிறது.

இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டு ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில், திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோயில் மற்றும் மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் ஆகிய மூன்று கோயில்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி மேற்குறிப்பிட்ட மூன்று கோயில்களிலும் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தினை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

 இத்திட்டத்தின்கீழ் பக்தர்களுக்கு காலை 8 மணி முதல் இரவு 10 மணிவரை அன்னதானம் வழங்கப்படும். இத்திட்டத்தின் மூலம் இம்மூன்று கோயில்களில் நாளொன்றுக்கு சுமார் 8 ஆயிரம் பக்தர்கள் அன்னதானம் பெற்று பயனடைவார்கள். கோயில்களில் தயாரிக்கப்படும் பிரசாதம் மற்றும் அன்னதானம் தரத்துடனும், சுகாதாரமான முறையிலும் தயாரிக்கப்படுவதை உறுதி செய்திட இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்துதல் ஆணையத்தால் வழங்கப்படும் உணவு தர பாதுகாப்புச் சான்றிதழ் அனைத்து முதுநிலை கோயில்கள் உட்பட 314 கோயில்களுக்கு பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 காணொலிக் காட்சி வாயிலாக மதுரையிலிருந்து வணிகவரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் மூர்த்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் பூமிநாதன், வெங்கடேசன், மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த், மதுரை மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், திருவண்ணாமலையிலிருந்து சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், ராமேசுவரத்திலிருந்து  ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: