×

புடினுக்கு எதிராக பதாகை ரஷ்ய முதியவர் ஒடிசாவில் மாயம்: போலீசார் மறுப்பு

புவனேஸ்வர்: ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரான வாசகங்களுடன் புவனேஸ்வர் ரயில் நிலையத்தில் சுற்றி வந்த முதியவர் மாயமாகி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை போலீசார் மறுத்துள்ளனர். “நான் உக்ரைன் போருக்கு எதிரானவன், ரஷ்ய அதிபர் புடினுக்கு எதிரானவன், வீடு இல்லாமல் உள்ள என்னை காப்பாற்றுங்கள்” என்று எழுதிய பதாகையுடன் ஒடிசா, புவனேஷ்வர் ரயில் நிலையத்தில் ரஷ்ய முதியவர் ஒருவர் சுற்றி வந்தார்.

அவர் திடீரென்று மாயமாகி விட்டதாக தகவல்கள் வௌியானது. ஏற்கனவே, ரஷ்ய அதிபர் புடினை விமர்சித்து வந்த ரஷ்ய தொழிலதிபரும், அந்நாட்டின் முன்னாள் எம்பி.யுமான பாவெல் அன்டோவ் கடந்த சில தினங்களுக்கு முன் ஒடிசாவின் ராயகடாவில் ஓட்டலில் தங்கியிருந்த போது மர்மமான முறையில் உயிரிழந்தார். அதே போல் விளாடிமிர் பிடேனேவ் என்ற ரஷ்யக்காரரும் ராயகடா ஓட்டலில் மர்மமான முறையில் இறந்தார். இப்படிப்பட்ட நிலையில், ரஷ்ய முதியவர் மாயமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் இந்த விஷயத்தை மறுத்த ரயில்வே போலீசார், ஆண்ட்ரு கிளகோலேவ் என்ற  அந்த   முதியவர் தற்போது தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக நேற்று தெரிவித்தனர். கடந்த 2016ம் ஆண்டு இந்தியா வந்துள்ள ஆண்ட்ருவுக்கு எந்த வருமானமும் இல்லை. ஐக்கிய நாடுகள் மூலம் அவர் இந்தியாவில் அடைக்கலம்  கோரியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Odisha , Anti-Putin Banner, Old Russian Man Vanished in Odisha, Police Deny
× RELATED ஒடிசாவில் கடும் வெப்ப அலை; பள்ளிகளுக்கு 3 நாள் விடுமுறை