×

சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு; சின்னசுருளி அருவியில் அடிப்படை வசதி செய்து தர கோரிக்கை

வருசநாடு: தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கோம்பைத்தொழு கிராமத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் சின்னசுருளி அருவி உள்ளது. இந்த அருவிக்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை விடப்பட்டுள்ளதால், சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இந்நிலையில், சின்னசுருளி அருவிக்கு வரும் சுற்றுலா பயணிகளிடம் 2 இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேகமலை ஊராட்சி நிர்வாகம் சார்பில் கோம்பைத்தொழு கிராமத்திலும், அங்கிருந்து அருவிக்கு செல்லும் வழியில் சுமார் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் வனத்துறை சார்பிலும் நுழைவுக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

இரண்டு இடங்களில் நுழைவுக்கட்டணம் வசூலித்தாலும், அருவி பகுதியில் எந்தவிதமான அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. அருவிக்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால், அருவிக்கு ஒருகிலோ மீட்டர் தூரத்திற்கு முன்னதாகவே கார்களை நிறுத்திவிட்டு நடந்து செல்லும் நிலை உள்ளது.

வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான இடம் ஒதுக்கப்படவில்லை. அருவி பகுதியில்  பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலையே உள்ளது. எனவே சின்னசுருளி அருவியில் அடிப்படை வசிதிகளை செய்து, நுழைவுக்கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Chinnasuruli Falls , Increase in tourist arrivals; Request to provide basic facilities at Chinnasuruli Falls
× RELATED வெள்ளியை உருக்கி ஊற்றியது போல...