×

சென்னையில் நடப்பாண்டில் இதுவரை 496 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது

சென்னை: சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் 9 குற்றவாளிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். நடப்பாண்டில் இதுவரை 496 குற்றவாளிகள் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். ஒரு வாரத்தில் நன்னடத்தை பிணை பத்திரத்தை மீறி மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சென்னை பெருநகரில், குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டுபிடித்து கைது செய்யவும், குற்றச் செயல்கள் நடவாமல் தடுக்கவும், பல்வேறு குற்றத்தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குற்றவாளிகளின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள், கொலை, கொலை முயற்சி குற்றங்களில் ஈடுபடுபவர்கள், திருட்டு, செயின் பறிப்பு, சைபர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், போதைப் பொருட்கள் கடத்துபவர்கள், கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு மிரட்டி பணம் பறிப்பவர்கள், நில அபகரிப்பு, ஆபாச வீடியோ தயாரிப்பு, மணல் கடத்தல், உணவு பொருட்கள் கடத்தல், போக்சோ மற்றும் பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ஆகியோரை தீவிரமாக கண்காணித்து குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
    
கடந்த 01.01.2022 முதல் 30.12.2022 வரை சென்னை பெருநகரில், கொலை, கொலை முயற்சி மற்றும் பொது அமைதிக்கு பங்கம் விளைவித்த குற்றங்களில் ஈடுபட்ட 300 குற்றவாளிகள், திருட்டு, சங்கிலி பறிப்பு, வழிப்பறி மற்றும் பணமோசடி குற்றங்களில் ஈடுபட்ட 114 குற்றவாளிகள், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்த 62 குற்றவாளிகள், பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய  8 குற்றவாளிகள், பெண்களை மானபங்கம் செய்த 2 குற்றவாளிகள், சைபர் குற்றத்தில் ஈடுபட்ட 9 குற்றவாளிகள் மற்றும் உணவு பொருள் கடத்தல் பிரிவில் கைது செய்யப்பட்ட 1 குற்றவாளி என மொத்தம் 496 குற்றவாளிகள் சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
    
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில் கடந்த 24.12.2022 முதல் 30.12.2022 வரையிலான ஒரு வாரத்தில் 9 குற்றவாளிகள், குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    
குற்றவாளிகள் 1.சல்மான் ஷரீப், வ/32, த/பெ.ஷகீல் ஷரீப், காந்தி தெரு, கோனைவட்டம், வேலூர் மாவட்டம் என்பவர் சட்டத்திற்கு புறம்பாக டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் நடத்தி வெளிநாட்டிலிருந்து வரும் இன்டர்நேஷனல் கால் அழைப்புகளை உள்ளூர் போன் அழைப்புகளாக மாற்றி மோசடி செய்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக, மத்திய குற்றப்பிரிவு, சைபர் கிரைம் பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். 2.அஷ்ரப் அலி, வ/28, த/பெ.தஸ்தகீர், அன்சாரி தெரு, புளியந்தோப்பு, சென்னை, 3.கிஷோர்குமார், வ/30, த/பெ.ஆகாசம், குருவன்குளம் 3வது தெரு, புளியந்தோப்பு ஆகிய இருவரும் 03.12.2022 அன்று அல்லிக்குளம் வளாகத்தில் முனுசாமி என்பவரை கொலை செய்தது தொடர்பாக, G-2 பெரியமேடு காவல் நிலையத்தில் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். 4.சந்தோஷ் (எ) தவக்களை, வ/23, த/பெ.சுரேஷ், 18வது பிளாக், கே.பி.பார்க், புளியந்தோப்பு என்பவர் வழிப்பறி குற்றத்தில் ஈடுபட்டதற்காக G-2 பெரியமேடு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவர் மீது P-1 புளியந்தோப்பு, P-4 பேசின் பாலம் ஆகிய காவல் நிலையங்களில் தலா 1 கொலை முயற்சி வழக்கும், G-2 பெரியமேடு காவல் நிலையத்தில் 6 வழிப்பறி வழக்கும் K-2 அயனாவரம் காவல் நிலையத்தில் 1 வழிப்பறி வழக்கும் என சுமார் 10 குற்ற வழக்குகள் உள்ளது.
    
மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள் சல்மான் ஷரீப், அஷ்ரப் அலி, கிஷோர்குமார் மற்றும் சந்தோஷ் (எ) தவக்களை ஆகிய 4 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப அவர்கள் மேற்படி 4 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 28.12.2022 அன்று உத்தரவிட்டார். அதன் பேரில் மேற்படி 4 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    
மேலும், குற்றவாளிகள் 5.சதிஷ் (எ) சண்டைக்கோழி, வ/23, த/பெ.அருள்தாஸ், சந்தியப்பன் 1வது தெரு, ஓட்டேரி, சென்னை, 6.அஜய் புத்தா, வ/28, த/பெ.சிவமூர்த்தி, நேரு தெரு, செந்தில் நகர், திருமுல்லைவாயல், சென்னை, 7.தினேஷ் (எ) மொட்டை தினேஷ், வ/22, த/பெ.பாஸ்கர், ஏ பிளாக், எஸ்.எஸ்.புரம் 2வது தெரு, ஓட்டேரி ஆகிய  3 நபர்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்த 18.10.2022 அன்று சதிஷ் என்பவரை கத்தியால் தாக்கி கொலை செய்தது தொடர்பாக, C-3 ஏழுகிணறு காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டனர். இவ்வழக்கில் சம்பந்தப்ட்ட 3 குற்றவாளிகள் சமீபத்தில் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர். P-3 வியாசர்பாடி காவல் நிலைய சரித்திரி பதிவேடு குற்றவாளியான அஜய் புத்தா மீது 1 கொலை, 1 கொலை முயற்சி உட்பட 15 வழக்குகள் உள்ளது. சதிஷ் (எ) சண்டைக்கோழி மீது 9 வழிப்பறி வழக்குகளும், தினேஷ் (எ) மொட்டை தினேஷ் மீது 1 கொலை முயற்சி உட்பட 6 குற்ற வழக்குகளும் உள்ளது. 8.பாலாஜி (எ) லொட்டை பாலாஜி, வ/37, த/பெ.சகாயம், உட்வார்ப் 3வது கேட், வால்டாக்ஸ் சாலை, சென்னை என்பவர் திருட்டு குற்றத்தில் ஈடுபட்டதற்காக, C-3 ஏழுகிணறு காவல் நிலைய குற்றப்பிரிவில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

சரித்திர பதிவேடு குற்றவாளியான இவர் மீது சுமார் 5 திருட்டு வழக்குகள் உள்ளது. 9.பரமசிவம் (எ) பர்மா, வ/35, த/பெ.குப்பன், சிஎஸ்.ஐ பள்ளி பாடசாலை தெரு, அம்பேத்கர் நகர், கொடுங்கையூர் என்பவர் கத்தியைக் காட்டி மிரட்டி பணம் பறித்துச் சென்றது தொடர்பாக, P-6 கொடுங்கையூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். சரித்திர பதிவேடு குற்றவாளியான பரமசிவம் மீது 1 கொலை முயற்சி உட்ட 5 குற்ற வழக்குகள் உள்ளது.
    
மேற்படி குற்றவாளிகளின் குற்றச்செயல்களை கட்டுப்படுத்த குற்றவாளிகள் சதிஷ் (எ) சண்டைக்கோழி, அஜய் புத்தா, தினேஷ் (எ) மொட்டை தினேஷ், பாலாஜி (எ) லொட்டை பாலாஜி மற்றும் பரமசிவம் (எ) பர்மா ஆகிய 5 குற்றவாளிகளை குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் அடைக்க சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர்கள் பரிந்துரை செய்ததின் பேரில், சென்னை காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால், மேற்படி 5 குற்றவாளிகளையும் குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் சிறையில் அடைக்க நேற்று (30.12.2022) உத்தரவிட்டார். அதன் பேரில் மேற்படி 5 குற்றவாளிகளும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
    
மேலும், குற்ற வழக்குகள் உள்ள நபர்கள், சம்பந்தப்பட்ட செயல்துறை நடுவர்களாகிய துணை ஆணையாளர்கள் முன்பு சாட்சிகளுடன் ஆஜராகி, தான் திருந்தி வாழப்போவதாகவும், இனி 1 வருடத்திற்கு எந்த குற்றச் செயலிலும் ஈடுபடமாட்டேன் எனவும் நன்னடத்தை பிணை பத்திரங்கள் எழுதி கொடுத்து, மீண்டும் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக வண்ணாரப்பேட்டை காவல் மாவட்டத்தில் 5 குற்றவாளிகள், கொளத்தூர் காவல் மாவட்டத்தில் 3 குற்றவாளிகள் மற்றும் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் 1 குற்றவாளி என மொத்தம் 9 குற்றவாளிகள் கடந்த 24.12.2022 முதல் 30.12.2022 வரையிலான ஒரு வாரத்தில் செயல்துறை நடுவராகிய துணை ஆணையாளர் உத்தரவின்பேரில், பிணை ஆவணத்தில் எழுதிக் கொடுத்த         1 வருட காலத்தில் நன்னடத்தையுடன் செயல்பட்ட நாட்கள் கழித்து மீதமுள்ள நாட்கள் பிணையில் வரமுடியாத சிறை தண்டனை (Bound Down) விதிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags : Chennai , So far 496 criminals have been arrested under the Gangster Prevention Act in Chennai this year
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...