இந்தியாவின் இருமல் மருந்தால் 18 குழந்தைகளின் உயிரிழப்பு: அனைத்து மருந்து தயாரிப்புகளும் நிறுத்தம்; ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் தகவல்

நொய்டா: உஸ்பெகிஸ்தான் நாட்டில் 18 குழந்தைகளின் உயிரிழப்பிற்கு காரணமாக இருந்த இந்தியாவின் இருமல் மருந்தின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து நொய்டாவில் உள்ள மேரியான் பயோடெக் நிறுவனத்திடம் மருந்தில் கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் விசாரணை நடைபெற்று வருவதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். மேரியான் பயோடெக் நிறுவனம் Dok-1 Max என்ற இருமல் மருந்து உள்பட பல்வேறு மருந்துகளை தயாரித்து வருகிறது.

Dok-1 Max மருந்தை எடுத்துக்கொண்டதால் தங்கள் நாட்டில் 18 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தான் அரசு சமீபத்தில் குற்றம்சாட்டியது. மேலும் மேரியான் பயோடெக் நிறுவனத்திற்கு எதிராக உஸ்பெகிஸ்தான் அரசு வழக்கு தொடர்ந்தது. இதையடுத்து நொய்டாவில் உள்ள அந்நிறுவனத்திற்குச் சென்ற மத்திய ஒன்றிய தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அதிகாரிகள், அங்கு உற்பத்தி செய்யப்பட்டு வந்த Dok-1 Max மருந்தை புதன் கிழமை அன்று ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் ஆய்வின் முடிவுகள் நேற்று வெளியாகின இதில் மருந்தில் கலப்படம் இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து Dok-1 Max மருந்து உள்பட அனைத்து மருந்து தயாரிப்பையும் நிறுத்த ஒன்றிய அரசு உத்தரவிட்டது.

இதனை தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ள ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, மேரியான் பயோடெக் நிறுவனத்தில் நேற்று இரவு முதல் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் மருந்து தயாரிப்பைப் பொருத்தவரை தங்கள் பக்கம் எவ்விதத் தவறும் இல்லை என மேரியான் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள நிறுவனத்தின் வழக்கறிஞர் ஹசன் ஹாரிஸ், நாங்கள் தயாரித்த மருந்தை  ஆய்வுக்கு உட்படுத்தினோம். எங்கள் பக்கம் எந்த தவறும் இல்லை என தெரிவித்துள்ளார்.

Related Stories: