சென்னை: தமிழக காவல்துறையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டிஜிபியாக ஜெயந்த் முரளி பணியாற்றி வந்தார். இவரது பணிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. ஓய்வுபெற்ற ஜெயந்த் முரளிக்கு தமிழக காவல்துறை சார்பில் பணி நிறைவு விழா நேற்று எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் நடந்தது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டிஜிபி ஜெயந்த் முரளிக்கு பேண்டு வாத்தியங்களுடன் சிவப்பு கம்பளம் வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சி மேடைக்கு வந்த ஜெயந்த் முரளிக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பிறகு காவல்துறை சார்பில் அளிக்கப்பட்ட பணி நிறைவு கவாத்து அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக்கொண்டார். இறுதியில் டிஜிபி சைலேந்திரபாபு, ஜெயந்த் முரளிக்கு தமிழக காவல்துறை சார்பில் நினைவு பரிசு வழங்கி கவுரவித்தார். இதில், சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர்.