சென்னை: பழவேற்காட்டில், சிறிய துறைமுகம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த 54 கிராம மீனவர்கள்,ஆய்வுக்காக வந்த ஒன்றிய குழுவை சந்தித்து மனு அளித்தனர். திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பழவேற்காட்டில், காட்டுப்பள்ளி முதல் ஆந்திர எல்லை ஆரம்பாக்கம் வரை சுமார் 60க்கும் மேற்பட்ட மீனவ கிராம மக்கள் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள், பழவேற்காடு ஒட்டிய கடல் மற்றும் ஏரியிலும் மீன்பிடித் தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், தற்போது பழவேற்காட்டில் மீன் பிடிப்பவர்களுக்காக சிறு துறைமுகம் அமைப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டு அதற்கான ஆய்வு நடைபெற்று வருகிறது.
இந்த ஆய்வை மேற்கொள்வதற்காக நேற்று பழவேற்காட்டிற்கு ஒன்றிய ஆய்வு குழுவினர் வந்தனர். இந்த ஆய்வு குழுவில், இடம் பெற்றிருந்த மீன்வளத்திற்கான கடலோரப் பொறியியல் ஒன்றிய நிறுவனம் இயக்குநர் வெங்கட் பிரசாத், துணை இயக்குநர் பெல்லியப்பா, மீன்வளத்துறை தலைமை பொறியாளர் ராஜி, செயற்பொறியாளர் முருகேசன்,உதவி செயற்பொறியாளர் முருகன் உள்ளிட்ட ஒன்றிய குழுவினர் சிறு துறைமுகம் அமையவுள்ள இடத்தை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். இதுபற்றி தகவலறிந்த 54 மீனவ கிராம நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டு, இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய குழுவிடம் நேரடியாக கோரிக்கை மனு அளித்தனர்.