சென்னை: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் நேர்காணல் வருகிற 4ம் தேதி முதல் 6ம் தேதி வரை சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் என்று மாநில செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ அறிவித்துள்ளார். திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் செயலாளர் டி.ஆர்.பி.ராஜா எம்எல்ஏ வெளியிட்ட அறிவிப்பு: திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் பொறுப்புக்கு விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 4 (புதன்), 5 (வியாழன்), 6 (வெள்ளி) ஆகிய நாட்களில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடைபெறும். தஞ்சை மண்டலத்திற்கு ஜனவரி 4ம் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரையும், நெல்லை மண்டலத்திற்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், வேலூர் மண்டலத்திற்கு மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும், மதுரை மண்டலத்திற்கு மாலை 5.30 மணி முதல் இரவு 8 மணி வரையும் நேர்காணல் நடைபெறும்.
5ம் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை கோவை மண்டலத்திற்கும், முகவை மண்டலத்திற்கு மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரையும், காஞ்சி மண்டலத்திற்கு மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரையும் நேர்காணல் நடைபெறும். 6ம் தேதி காலை 8 மணி முதல் 12 மணி வரை சேலம் மண்டலத்திற்கும், மதியம் 2 மணி முதல் மாலை 4 மணி வரை திருச்சி மண்டலத்திற்கும், மாலை 4 மணி முதல் மாலை 6 மணி வரை சென்னை மண்டலத்திற்கும் நேர்காணல் நடைபெறும். ஒவ்வொரு மண்டலத்திற்கும் உட்பட்ட திமுக மாவட்டங்களுக்கு விண்ணப்பித்த தகுதியான விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பப்படும் நேர்காணல் கடிதத்துடன், குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு 30 நிமிடம் முன்னதாக வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.