×

பவானிசாகர் அணை அருகே ஊருக்குள் புகுந்து தெருவில் நடமாடிய காட்டு யானை: கிராம மக்கள் அச்சம்

சத்தியமங்கலம்: பவானிசாகர் அணை அருகே காட்டு யானை ஊருக்குள் புகுந்து தெருக்களில் நடமாடியதால் கிராம மக்கள் அச்சமடைந்தனர்.  ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் உள்ள பவானிசாகர் வனப்பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசிக்கின்றன. இரவு நேரத்தில் வனப்பகுதியை விட்டு வெளியேறும் காட்டு யானைகள் அருகில் உள்ள கிராமங்களில் புகுந்து விவசாய தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.
இந்நிலையில் பவானிசாகர் அணை அருகே உள்ள புங்கார் கிராமத்தில் நள்ளிரவில் ஒரு காட்டு யானை ஊருக்குள் புகுந்து தெருக்களில் ஜாலியாக நடமாடியது.  கிராம மக்கள் சத்தம் போட்டு காட்டு யானையை விரட்ட முயற்சித்தனர். ஊருக்குள் நுழைந்த காட்டு யானை ஒவ்வொரு தெருவாக நடமாடிய பின்னர் மெதுவாக விவசாய தோட்டங்களில் நுழைந்து வனப்பகுதி நோக்கி சென்றது.

காட்டு யானை ஊருக்குள் புகுந்து தெருவில் நடமாடியதால் அப்பகுதி மக்கள் மற்றும் விவசாயிகள் அச்சமடைந்தனர். யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறும் பகுதிகளில் வனத்துறையினர் ரோந்துப்பணி மேற்கொண்டு காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Bhavanisagar dam , A wild elephant entered the village near Bhavanisagar dam and roamed the street: villagers fear
× RELATED 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி பவானிசாகர் அணையின் மீது விழிப்புணர்வு பேனர்