சென்னை: போராடுவதால் பலம் கிடைக்கிறது. அதனால் போராடிக் கொண்டே இருக்கிறேன் என்றார் நடிகை சமந்தா. மயோசிடிஸ் என்ற அரிய வகை நோயால் சமந்தா பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 மாதங்களாக அவர் படப்பிடிப்புகளுக்கு செல்லவில்லை. இந்தியில் ஆயுஷ்மான் குரானா ஜோடியாக நடிக்க இருந்த படத்திலிருந்து அவர் விலகிவிட்டார். தெலுங்கில் குஷி படம் அவருக்காக தள்ளிப்போடப்பட்டு வருகிறது. அமெரிக்கா சென்று சிகிச்சை பெற்றும் பயனில்லாததால் கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். இப்போது மீண்டும் வெளிநாட்டுக்கு சிகிச்சைக்காக அவர் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மாஸ்கோவின் காவிரி படத்தில் சமந்தாவுக்கு ஜோடியாக நடித்தவரும் பாடகி சின்மயியின் கணவருமான ராகுல் ரவீந்திரன், சமந்தாவுக்காக ஒரு பதிவை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்தார்.
அதில், ‘எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் நீ போராடிக்கொண்டே இருப்பாய். இன்னும் இன்னும் போராடிக்கொண்ட இருப்பாய். ஏனென்றால் நீ ஒரு இரும்புப்பெண். உன்னை எதுவும் தோற்கடிக்காது. கஷ்டப்படுத்தாது. மாறாக அவை உன்னை இன்னும் சக்தி வாய்ந்தவளாக மாற்றும்’ என குறிப்பிட்டிருந்தார். அவருக்கு பதிலளித்த சமந்தா, ‘நன்றி ராகுல், யாராவது தங்கள் வாழ்க்கையில் போரோடுகிறார்களோ அவர்களுக்கு இதனை சொல்லிக்கொள்கிறேன். போராடிக்கொண்டே இருங்கள். நீங்கள் இன்னும் பலமாக தயாராவீர்கள். இன்னும் திடமாக மாறி கஷ்டங்களை எதிர்கொள்வீர்கள். போராடுவதால்தான் எனக்கு பலம் கிடைக்கிறது’ என தெரிவித்திருக்கிறார்.