திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த திருவேங்கடா புரத்தில் ஐயப்ப சுவாமி விளக்கு பூஜை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் அகில பாரத ஐயப்பா சேவா சங்கதின் சார்பில் ஆண்டுதோறும் மார்கழி மாதத்தில் திருவிளக்கு பூஜை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் 42ம் ஆண்டு விளக்கு பூஜை முன்னிட்டு திருவேங்கடா புரத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தில் விழா தொடங்கியது. இந்த பூஜையில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கைகளில் விளக்குகளை ஏந்தி சாமியே சரணம் ஐயப்பா என ஐயப்ப சரண கோஷம் முழங்க தங்கள் வேண்டுதலை ஒரு கிலோ மிட்டர் தொலைவில் உள்ள ஸ்ரீ பொன்னியம்மன் ஆலயம் வரை ஊர்வலமாக சென்று ஐயப்பனை வணங்கினார்கள்.
ஊர்வல சுற்றுப்பாதையில் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் ஐயப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் அளித்தார். பின்னர் விளக்கு பூஜையின் போது இரவை பகலாக மாற்றிய வானவேடிக்கைகள் காண்போரை கவர்ந்தது. கேரள பாரம்பரிய வாத்தியமான கெண்டை மேளம் சத்தம் அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த திருவிளக்கு பூஜையில் பல சுற்றுவட்டாரத்தில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு ஐயப்பனை தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதமானம் வழங்கப்பட்டது.