நிலக்கோட்டை : கொடைரோடு பகுதியில் விளைச்சல் அதிகரித்தும் விலை வீழ்ச்சி மற்றும் தொடர் மழையால் சப்போட்டா உதிருவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
நிலக்கோட்டையை அடுத்த கொடைரோடு,காமலாபுரம், ஊத்துப்பட்டி, பள்ளபட்டி மற்றும் சிறுமலை அடிவாரப் பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சப்போட்டா விவசாயம் அதிகளவில் சாகுபடி செய்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழையை அடுத்து, இந்தாண்டு சப்போட்டா விளைச்சல் அமோகமாக விளைந்துள்ளது.
ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருவதாலும் கிலோ 3 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே விலை போகிறது. இதனால் விளைச்சல் அதிகரித்தும் போதிய விலை இல்லாததாலும், விவசாயிகளால் பறிக்க தாமதமாவதாலும் கொத்து கொத்தாக காய்த்து தொங்கும் சப்போட்டா காய்கள் முழுமையாக பழக்காமலே உதிர்ந்து வருகிறது. இதனால் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு சப்போட்டா நல்ல விளைச்சல் கிடைத்தும், சீதோசண நிலை காரணமாக பாதியிலே உதிரும் சப்போட்டா காய்களால் இந்த ஆண்டு பெரும் நஷ்டம் ஏற்படும் என இப்பகுதி சப்போட்டா விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.