மும்பை: ஐசிஐசிஐ வங்கியின் தலைமை செயல் அதிகாரியாக சந்தா கோச்சார் பணியாற்றியபோது விதிமுறைகளை மீறி விடியோகான் குழுமத்துக்கு ரூ.3,250 கோடி கடன் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த புகார்களை தொடர்ந்து ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார் ஆகிய இருவரையும் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். கடனை திருப்பி செலுத்தாமல் ஏமாற்றிய விடியோகான் குழும நிறுவனத் தலைவர் வேணுகோபால் தூத்தை நேற்றுமுன்தினம் போலீசார் கைது செய்தனர். மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள் 3 பேரையும் இன்று வரை சிபிஐ காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இந்நிலையில் இவர்கள் 3 பேரும் சிறப்பு படுக்கைகள், மெத்தைகள் ஆகியவற்றை பயன்படுத்த நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது. அவர்கள் வீட்டில் சமைத்த உணவுகளை சாப்பிடவும், மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.