திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அருகே அண்ணன் இறந்த சோகத்தில் பாசக்கார தங்கை உயிரிழந்தார். இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.
கல்பாக்கம் அடுத்த சதுரங்கப்பட்டினத்தை சேர்ந்தவர் ஆதிமூலம் (65). மீனவர். இவருக்கு மனைவி, பிள்ளைகள் உள்ளனர். மேலும் ஆதிமூலத்துடன் பிறந்தவர்கள் தாமரைசெல்வி, வள்ளியம்மாள், பத்மா, வெள்ளச்சி, கோட்டி என 5 அக்கா, தங்கைகள். ஆதிமூலம் மட்டும் குடும்பத்தில் ஆண் வாரிசு. அதனால் 5 அக்கா, தங்கையும் ஆதிமூலத்தின் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் அக்கா, தங்கை மீதும் ஆதிமூலமும் அலாதி பிரியம் கொண்டவர். இந்நிலையில், ஆதிமூலம் சில ஆண்டுகளாக சிறுநீரக கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல மருத்துவமனையில் சிகிச்சையும் பெற்றார். உடல் நிலை அதிகளவில் பாதிக்கப்பட்டதால் சில தினங்களுக்கு முன்பு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தார். ‘தங்களுடன் பிறந்த ஒரே ஒரு ஆண் வாரிசு இறந்து விட்டாரே’ என மிகுந்த சோகக்கடலில் 5 அக்கா, தங்கையும் மூழ்கினர்.
அவர்களால் தங்களை தேற்றி கொள்ள முடியவில்லை. அனைவரது கணவன்மார்கள் மற்றும் பிள்ளைகள் தேற்றியும் அதிலிருந்து அவர்களால் மீள முடியவில்லை. மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட தங்கை தாமரைசெல்விக்கு நேற்றிரவு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அடுத்த சில வினாடிகளில் தாமரைசெல்வியின் உயிர் பிரிந்தது. தாமரைசெல்வியின் கணவன் இறந்து விட்டார். 2 மகள், ஒரு மகன் உள்ளனர். தாமரை செல்வியுடன் பிறந்தவர்கள், உறவினர்கள் என அனைத்து தரப்பினரும் கதறி அழுதனர். இதையடுத்து தாமரைசெல்வியின் உடல் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது. இதனால் கிராமமே சோகத்தில் மூழ்கியது.