×

சுஷாந்த் கொலை செய்யப்பட்டார் பிரேத பரிசோதனை செய்தவர் தகவல்

மும்பை: வளர்ந்து வந்த இளம் பாலிவுட் நடிகர் சுஷாந்த் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்த் தற்கொலை வழக்கை மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வந்த நிலையில், அதில் போதை மருந்து பிரச்சினையும் கலந்திருந்ததால் அது அமலாக்கத் துறை மற்றும் நார்கோடிக்ஸ் தடுப்பு பிரிவு, சிபிஐ ஆகியவற்றிடம் ஒப்படைக்கப்பட்டது. சுஷாந்தின் தோழியும் நடிகையுமான ரியா சக்ரவர்த்தி சுஷாந்திற்கு போதை பொருளை சப்ளை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த நிலையில் சுஷாந்த் தற்கொலை செய்யவில்லை. கொலை செய்யப்பட்டுள்ளார் என்று பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: சுஷாந்த் சிங் இறந்த போது 5 உடல்கள் மும்பையில் உள்ள கூப்பர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டன. அதில் ஒரு சடலம் விஐபியின் சடலம் என தெரிவித்தனர். நான் பிரேத பரிசோதனை கூடத்திற்கு சென்றபோதுதான் அந்த விஐபி உடல் சுஷாந்த் சிங் என தெரியவந்தது. அவரது கழுத்தில் இரண்டு அல்லது மூன்று இடங்களில் காயங்கள் இருந்தன. உடற்கூராய்வு அனைத்தும் வீடியோ பதிவுதான் செய்யப்பட வேண்டும். ஆனால் எனது உயரதிகாரிகள் புகைப்படங்களை மட்டுமே எடுக்க சொன்னார்கள். அதனால் நானும் அப்படியே செய்தேன்.

சுஷாந்தின் உடலை பார்த்ததுமே இது தற்கொலை அல்ல, கொலை என நான் எனது சீனியர்களிடம் கூறினேன். அவர்கள் அதை கண்டுகொள்ளாமல் போட்டோ எடுக்கும் வேலையை மட்டும் பார் என கூறினர். இதையடுத்து பிரேத பரிசோதனை செய்து உடலை போலீஸில் ஒப்படைத்தோம். பொதுவாக இரவு நேரத்தில் பிரேத பரிசோதனை நடத்த மாட்டோம். ஆனால் அன்று அவசர அவசரமாக சுஷாந்தின் பிரேத பரிசோதனை நடந்தது. இவ்வாறு அவர் கூறியிருக்கிறார். இது பாலிவுட்டில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. ரூப்குமார் 2 வருடங்களுக்கு பிறகு இந்த தகவல்களை வெளியிடுவது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

Tags : Sushant , Sushant was murdered, according to the postmortem
× RELATED நடிகை ஸ்ரீ தேவி மரணம் மூடி...