அணைக்கட்டு: அணைக்கட்டு அருகே உள்ள மலைகிரமத்திற்கு செல்ல வதியாக தார்சாலை அமைத்து தர வேண்டும் என்று அப்பகதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகாவில் பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லலை, அல்லேரி, குருமலை உள்ளிட்ட மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த மலை ஊராட்சிகளில் 70க்கும் மேற்பட்ட சிறிய கிராமங்கள் உள்ளன. அதில் ஆயிரக்கணக்கான மலைவாழ் மக்கள் வசிக்கின்றனர். பீஞ்சமந்தை, பலாம்பட்டு, ஜார்தான்கொல்லை உள்ளிட்ட மலை ஊராட்சிகள் அணைக்கட்டு ஒன்றிய கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த கிராம மக்களுக்கு அணைக்கட்டு ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் மூலம் குடிநீர், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பீஞ்சமந்தை, பலாம்பட்டு மலை ஊராட்சிகளுக்கு செல்ல வரதலம்பட்டு அருகே முத்துகுமரன் மலை அடிவாரத்தில் இருந்து செல்லும் மண் சாலை வழியை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதை வழியாகவே பீஞ்மந்தை, பலாம்பட்டு ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் ஒடுகத்தூர், அணைக்கட்டிற்கு வந்து செல்கின்றனர்.
இது மண்பாதையாக இருப்பதால் குண்டும் குழியுமாக உள்ளது. மேலும் மழை பெய்துவிட்டால் சேறும், சகதியுமாக மாறிவிடும். வேறு வழியின்றி இந்த சேற்றில்தான் மலைவாழ்மக்கள் வந்து செல்கின்றனர். இதற்காக சில இடங்களில் அமைக்கப்பட்டிருந்த தார்சாலை சில ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனமழையால் அனைத்தும் சேதமாகி பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் தெள்ளை-ஜார்தான்கொல்லை மலைக்கு செல்லும் வழியில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் மலைகளில் வழிந்தோடும் தண்ணீர் செல்லும் நீர்வரத்து கால்வாய்கள் உள்ளது. இந்த கால்வாய்களில் தற்போது அதிகளவு தண்ணீர் செல்கிறது.
இதனால் இவ்வழியாக மிகவும் ஆபத்தான நிலையில் செல்ல வேண்டி உள்ளது. இதில் ஜார்தான்கொல்லை பகுதியில் உள்ள அரசு பள்ளிக்கு ஆசிரியர்களும் இந்த கரடு முரடான பாதையில்தான் சென்று வருகின்றனர். எனவே தெள்ளை-ஜார்தான்கொல்லை மலைக்கு தார்சாலை அமைக்க வேண்டும் என்று மலைவாழ் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.