×

அன்னிய செலாவணி சட்டத்தை மீறிய விவகாரம்; ஐஓபிக்கு அமலாக்க துறை அபராதம் விதித்ததில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: அன்னிய செலாவணி சட்டத்தை மீறியதாக இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு அபராதம் விதித்து அமலாக்க பிரிவு உத்தரவில் தலையிட மறுத்த சென்னை ஐகோர்ட், சம்பந்தப்பட்ட மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தை அணுக வங்கி தரப்புக்கு உத்தரவிட்டுள்ளது. டிரினிட்டி இண்டர்நேஷனல் என்ற நிறுவனம், டெல்லி ஜனக்புரியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நடப்பு கணக்கை பராமரித்து வருகிறது. இதிலிருந்து ரூ.1 கோடியே 54 லட்சத்து 20 ஆயிரத்து 800யை மும்பையில் உள்ள ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டு, பின் லண்டனில் அதே வங்கி கணக்குக்கு மாற்றப்பட்டது.

கடந்த 1991ம் ஆண்டு நடந்த இந்த பரிவர்த்தனை, அன்னிய செலாவணி ஒழுங்குமுறை சட்ட விதிகளை மீறி மேற்கொள்ளப்பட்டதாக கூறி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு டெல்லி அமலாக்க பிரிவு அபராதம் விதித்து உத்தரவிட்டது. இதை எதிர்த்து, வங்கி சார்பிலும், அதிகாரிகள் சார்பிலும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமலாக்க பிரிவு உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்ய மேல் முறையீட்டு தீர்ப்பாயம் இருந்தும், சென்னை ஐகோர்ட்டில் நேரடியாக வழக்கு தொடர முடியாது. எனவே, அமலாக்க பிரிவு உத்தரவில் தலையிட முடியாது.

அமலாக்க பிரிவு உத்தரவை எதிர்த்து 45 நாட்களுக்குள் மேல் முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். அதுவரை,  அபராதத்துக்கு விதித்த தடை நீட்டிக்கப்படுகிறது. 45 நாட்களுக்குள் மேல் முறையீடு செய்யாவிட்டால், அபராதம் விதித்து அமலாக்க பிரிவு இயக்குனர் பிறப்பித்த உத்தரவு இறுதியானது’ என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.



Tags : IOP ,ICourt , Violation of foreign exchange laws; Enforcement department cannot interfere with fine imposed on IOP: ICourt orders
× RELATED தீ விபத்தில் சிக்கி சிறுநீரக...