சென்னை: காஞ்சிபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 14 பயனாளிகளுக்கு ரூ.8.56 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து 255 மனுக்களை பெற்ற ஆட்சியர் ஆர்த்தி, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அரசு துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில் உத்திரமேரூர் வட்டம் ஆழிசூர் மற்றும் திணையாம்பூண்டி கிராமத்தை சேர்ந்த 12 பயனாளிகளுக்கு ரூ.8.50 லட்சம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ரூ.5. 560 மதிப்பில் காதுக்குபின் அணியும் காதொலி கருவி 2, மாற்றுத்திறனாளிகள் பயனாளிகளுக்கும் ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.
தொடர்ந்து, தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய அளவிலான கிக் பாக்சிங் போட்டியில் தங்கப்பதக்கம் மற்றும் வெண்கலப்பதக்கம் வென்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த மாணவி நீனா, வெண்கலப்பதக்கம் வென்ற உத்திரமேரூரை சேர்ந்த மாணவர் சரத்ராஜ் ஆகியோரை ஆட்சியர் ஆர்த்தி பாராட்டினார்.