புதுடெல்லி: ஐசிஐசிஐ வங்கியின் நிதி முறைகேடு வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ கைது செய்தது. ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி சந்தா கோச்சார், கடந்த 2012ம் ஆண்டு காலகட்டத்தில் பதவியில் இருந்த போது, வீடியோகான் நிறுவனத்திற்கு முறைகேடாக சுமார் ரூ.3,250 கோடி கடன் கொடுத்துள்ளார். இந்த கடன் பரிவர்த்தனை மூலம் சந்தா கோச்சாரின் கணவர் தீபக் கோச்சர் மற்றும் உறவினர்கள் பெருமளவில் நிதி ஆதாயமடைந்தனர். இந்த முறைகேடு விவகாரம் கடந்த 2018ம் ஆண்டில் அம்பலமானது.
அதையடுத்து 2018 அக்டோபர் மாதம் ஐசிஐசிஐ வங்கி தலைமை பொறுப்பில் இருந்து சந்தா கோச்சார் நீக்கப்பட்டார். தொடர்ந்து சந்தா கோச்சார், அவரது கணவர் தீபக் கோச்சார், வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத் உள்ளிட்டோர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்தது. அத்துடன் 2019ம் ஆண்டில் மும்பையில் உள்ள சந்தா கோச்சார், வேணுகோபால் தூத் உள்ளிட்டோரின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி அங்கிருந்து ஆவணங்கள், மின்னணு சான்றுகள், ஹார்ட் டிஸ்க் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை சுமார் 3 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் சந்தா கோச்சார் மற்றும் அவரது கணவர் தீபக் கோச்சரை சிபிஐ கைது செய்தது. தீபக் கோச்சார் ஏற்கனவே அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் இருக்கிறார். இருவரின் சொத்துக்களையும் அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இந்நிலையில் இன்று ஐசிஐசிஐ வங்கியின் நிதி முறைகேடு வழக்கில் வீடியோகான் குழும தலைவர் வேணுகோபால் தூத்தை சிபிஐ அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.