தண்டையார்பேட்டை: கேக் சாப்பிட்ட அக்கா, தம்பி அடுத்தடுத்து மயங்கிவிழுந்தது காசிமேட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு, இந்திரா நகர் பகுதியில் வசிப்பவர் நித்யானந்தன் (32). இவரது மகள் கிரித்திஷா (7). தனது மகளின் பிறந்த நாளுக்காக, நித்யானந்தனும் அவரது அக்கா கல்பனா (33) ஆகியோர் ராயபுரத்தில் உள்ள ஒரு பிரபல கேக் கடையில் ஒன்றரை கிலோ கேக் வாங்கியுள்ளனர். இதன்பின்னர் நேற்று மாலை நடைபெற்ற பிறந்த நாளில் கிரித்திஷா கேக் வெட்டி, தனது தந்தை நித்யானந்தனுக்கும் அத்தை கல்பனாவுக்கும் கொடுத்துள்ளார். முதலில் கேக்கை சாப்பிட்ட கல்பனாகசப்பதாக கூறி வாந்தி எடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து நித்யானந்தனும் வாந்தி எடுத்து, மயங்கி விழுந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் கேக்கை சாப்பிடாமல், அதை வாங்கிய ராயபுரத்தில் உள்ள கேக் கடைக்கு சென்று விசாரித்து உள்ளனர். அப்போது கடை ஊழியர்கள், நாங்கள் கொடுத்த கேக்கில் எந்த பிரச்னையும் இல்லை’’ என்று அலட்சியமாக பதில் கூறியதாக தெரிகிறது. இதையடுத்து சென்னை மாநகர காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நித்யானந்தனின் குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, கேக் மாதிரியை எடுத்து மாநகராட்சி ஆய்வு கூடத்துக்கு அனுப்பி வைத்துள்ளனர். பாதிக்கப்பட்ட கல்பனா, நித்யானந்தன் ஆகியோருக்கு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. புகாரின்பேரில் காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கேக் கடை ஊழியர்களிடம் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.