×

ஒசூர் அருகே தனியார் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயலில் கவிழ்ந்து விபத்து: பெண் ஒருவர் உயிரிழப்பு; 20க்கும் அதிகமானோர் படுகாயம்..!!

கிருஷ்ணகிரி: ஒசூர் அருகே தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் பெண் ஒருவர் உயிரிழந்தார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த கெலமங்கலம் அருகே உள்ள நாகமங்கலத்தில் இருந்து சுமார் 40 பயணிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு நோக்கி தனியார் பேருந்து சென்று கொண்டிருந்தது. அச்சமயம் பேருந்து அதிவேகமாக சென்றதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கெலமங்கலம் அருகே உள்ள செக்கேரி பகுதியில் வளைவில் பேருந்து திரும்பியபோது, எதிரே வந்த பேருந்து மீது மோதாமல் இருக்க தவிர்த்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த வயலில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் பேருந்தின் பின்பக்க சக்கரம் இரண்டும் தனியாக கழன்று விழுந்துள்ளது. இடிபாடுகளில் சிக்கி செக்கேரி பகுதியை சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க யசோதா என்ற பெண்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். மற்றவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கெலமங்கலம் போலீசார், அப்பகுதி மக்களுடன் இணைந்து காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வயலில் இருந்து பேருந்தை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.


Tags : Osur , Hosur, private bus, accident, loss of life
× RELATED ஒசூர், கிருஷ்ணகிரியில் 4...