சென்னை: அருங்காட்சியகம் மற்றும் பொதுமக்கள் நிகழ்ச்சி நடத்தும் வகையில் ரூ.29 கோடியில் விக்டோரியா மஹாலை புனரமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை மாநகராட்சியின் ரிப்பன் கட்ட வளாகத்துக்கு அருகில் அமைந்துள்ள விக்டோரியா மஹால் 140 ஆண்டுகள் பழமையானது. 1882ல் சென்னையில் வசித்து வந்த முக்கிய பிரமுகர்கள் ஒன்று கூடி, மெட்ராஸ் நகரில் ஒரு டவுன் ஹால் கட்ட முடிவு செய்தனர். 1883ல் பீப்பிள்ஸ் பார்க் என்ற பகுதியில் இருந்து 3.14 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு, விஜயநகர மாகாராஜாவான ஸ்ரீபவுசபதி அனந்த கஜபதி ராஜூ கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.
இது, இந்தோ சாரசெனிக் கட்டிடக்கலை பணியில் கட்டப்பட்டது. இதை ராபர்ட் சிசோமால் ரோமனெசுக் மறுமலர்ச்சிக் கட்டிடக்கலையால் வடிவமைக்கப்பட்டு, நம்பெருமாள் செட்டியாரால் 1888 முதல் தொடங்கி 1890 கட்டி முடிக்கப்பட்டது. 1888 ஜனவரியில் நடந்த, நகர மக்கள் கூட்டத்தில், மகாராணியின் பொன்விழாவின் நினைவாக கட்டிடத்திற்கு விக்டோரியாக மகாராணி பொது மண்டபம் என பெயரிடப்பட்டது. 2021-22ம் ஆண்டு பேரவையில், அமைச்சர் கே.என்.நேரு சென்னையில் பழமை வாய்ந்த விக்டோரியா கட்டிடம் அதன் தொன்மை மாறாமல் பொலிவுடன் புனரமைக்கப்படும் என அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில்:
‘‘விக்டோரியா பொதுக் கூடத்தை பாதுகாத்து புத்துயிர் அளிக்கும் வகையில் சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் ரூ.29 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விக்டோரியா பொதுக்கூடத்தை புதுப்பிக்கும் பணிகளில் கட்டிடத்தை மறுசீரமைத்தல் மற்றும் பராமரித்தல், மாநகர அருங்காட்சியகம் அமைத்தல், நினைவு பரிசு அங்காடிகள் அமைத்தல் மற்றும் கட்டிடத்திற்கு வெளியே புல் தரைகளை அமைத்தல் போன்ற பணிகள் அடங்கும்.
ஜனவரி மாதம் ஒப்பந்தம் கோரப்பட்டு பணிகள் தொடங்கப்படும். பழமை மாறாமல் புதுப்பிக்கும் வகையில் பொதுப்பணித்துறை பொறியாளர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்படும். மேலும் விக்டோரியா பொதுக்கூடத்திற்கான புனரமைப்பு பணிக்கான விரிவான திட்ட அறிக்கையில் அதன் முழுமையான உறுதித்தன்மையுடன் பழமை மாறாமல் இருப்பதை உறுதி செய்ய துணை ஆணையர் தலைமையில் 10 நபர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.