விழுப்புரம்: பேராசிரியர் அன்பழகன் நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி விழுப்புரம் தெற்கு மாவட்ட திமுக சார்பில் அத்தியூர் திருவாதி, வேலியம்பாக்கம் ஊராட்சிகளில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. மாவட்ட செயலாளர் புகழேந்தி எம்எல்ஏ தலைமை தாங்கினார். லட்சுமணன் எம்எல்ஏ, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ஜனகராஜ், ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசுகையில், தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றிட முதல்வர் பாடுபட்டு வருகிறார்.
திராவிட மாடல் ஆட்சிக்கு வித்திட்டவர்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன். அவர்கள் விட்டுச்சென்ற பணிகளை தற்போதைய முதல்வர் மு.க ஸ்டாலின் செயல்படுத்தி கொண்டிருக்கிறார். சி.வி சண்முகம் கட்சிக்கு எங்கிருந்து வந்தார் என்று யாருக்கும் தெரியாது. ஆனால் தந்தையை பின்பற்றி அரசியலுக்கு வந்த முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம், திமுகவை பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லை. ஊரை ஏமாற்றிவிட்டு மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருப்பவர், என்றார்.