சென்னை: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 98வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னை தி.நகரில் உள்ள பாஜ அலுவலகத்தில் அவரது படத்துக்கு தமிழக பாஜ மேலிட இணை ஒருங்கிணைப்பாளர் சுதாகர் ரெட்டி, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து சுதாகர் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை வாஜ்பாய் பிறந்தநாள் நல்லாட்சி நாளாக கொண்டாடி வருகிறோம். கிறிஸ்தவ மக்கள் அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆத்ம நிர்பர் பாரத் திட்டத்துக்கு வலிமையான அடித்தளமிட்டவர் வாஜ்பாய். அவர் பாதையில் இன்று மோடி தலைமையில் இந்தியா முன்னேறி வருகிறது. ஊழலற்ற ஆட்சியை வழங்கியவர், எதிரிகளே இல்லாதவர் வாஜ்பாய். இலவசக் கல்வி உள்ளிட்ட மக்களுக்கான பல திட்டங்களை தொடங்கியவர். உரிய நேரத்தில் உரிய முறையில் கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். அதிமுக கட்சிக்குள் என்ன பிரச்னை இருந்தாலும் அவர்கள் எங்கள் நண்பர்கள். 27ம் தேதி ஜே.பி.நட்டா வருவது கட்சியை வலுப்படுத்துவதற்காக மட்டுமே. அதிலும் குறிப்பாக நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பணிகளை பூத் வரை மேற்கொள்ளும் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். இவ்வாறு அவர் கூறினார்.