சென்னை: கடந்த 15 நாட்களாக தமிழ்நாட்டில் நாள்தோறும் 4000 முதல் 5000 ஆர்டிபிசிஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டு வருகிறது என்று அமைச்சர் கூறியுள்ளார். இதில் 10-க்கும் குறைவாக ஒற்றை இலக்க எண்களில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகியுள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.
சீனா, தைவான், ஜப்பான் போன்ற நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டாயம் கொரோனா பரிசோதனை விமான நிலையத்தில் இன்று முதல் நடத்தப்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். மேலும் முகக்கவசம், தனிமனித இடைவெளி போன்ற விதிமுறைகள் எதுவும் விலக்கப்படவில்லை எனவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கொரோனா மீண்டும் சற்று தலைதூக்கிய நிலையில் கொரோனா குறித்து மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் என்றும், கொரோனா நோயாளிகளுக்கான படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து தமிழகம் வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது எனவும் அடுத்த 3 மாதங்களுக்கு தேவையான உயிர் காக்கும் மருந்துகள் கையிருப்பு வைக்கப்பட்டுள்ளது எனவும் ஏற்கனவே அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.