புதுடெல்லி: ஆதாரில் மோசடிகளைத் தவிர்க்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) நினைவுபடுத்தி உள்ளது. இந்திய மக்களின் அடையாளத்திற்கான உலக அளவில் ஏற்று கொள்ளப்பட்ட சான்றாக ஆதார் எண் விளங்குகிறது. ஒன்றிய அரசு நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100 க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் அடையாளம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வங்கிகள், வங்கி சாராத நிதி நிறுவனங்கள், பல்வேறு நிதி நிறுவனங்கள், வாடிக்கையாளர்களை எந்தத்தடையும் இன்றி அங்கீகரித்து, அனைத்து சேவைகளையும் வழங்க ஆதாரை பயன்படுத்துகின்றன.
இந்நிலையில், மோசடிகளைத் தவிர்க்க 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என யுஐடிஏஐ உத்தரவிட்டுள்ளது. ஆதார் எண் பெற்று 10 ஆண்டு நிறைவடைந்திருந்தால், வீட்டு முகவரி, ரேஷன் கார்டு போன்ற துணை ஆதாரங்கள் மூலம் ஆதார் அட்டையை புதுப்பித்துக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டை வழங்கும் திட்டம் கடந்த 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. 13 ஆண்டுகளில் இதுவரை 135 கோடிக்கும் மேற்பட்டோருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது.