திருச்சுழி : திருச்சுழி அருகே, பெருமாள் கோயிலில் தடுப்புச்சுவர் இல்லாத தரைமட்டக் கிணற்றால், பொதுமக்களுக்கு விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, தடுப்புச்சுவர் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.திருச்சுழி அருகே உள்ள தொப்பலாக்கரை கிராமத்தில் சுமார் 1,500க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊரில், 700 ஆண்டு பழமை வாய்ந்த பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் 30 அடி ஆழமுள்ள தரைமட்டக் கிணறு உள்ளது.
முன்பு பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்த வந்த கிணறு, நாளடைவில் பயன்பாடு குறைந்ததால், தூர்வாரப்படாமல் குப்பைகள் குவிந்து தூர்நாற்றம் விசுகிறது. கிணற்று பாதை வழியாக கோயிலுக்கு சிறுவர்கள் முதல் பெரியவர் வரை காலை மற்றும் மாலை நேரத்தில் சாமி கும்பிடச் செல்கின்றனர்.மேலும், இங்குள்ள பெருமாளை வணங்கினால் நினைத்த காரியம் நடக்கும் என்பதால், அருகில் உள்ள கிராமத்தினரும் வணங்கி செல்கின்றனர். இந்நிலையில், தரைமட்டக் கிணற்றுக்கு தடுப்புச்சுவர் இல்லாததால், கோயிலுக்கும் வரும் பொதுமக்கள் தவறி விழும் அபாயம் உள்ளது. எனவே, கிணற்றை சுற்றி தடுப்புச்சுவர் கட்ட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.