உடன்குடி: தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் போலீசார் உடன்குடி முத்துநகர் பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது நெல்லையிலிருந்து குலசேகரன்பட்டினம் பகுதிக்கு வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் மூன்று பிளாஸ்டிக் கவரில் திமிங்கலத்தின் உமிழ்நீரான அம்பர்கிரீஷ் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து போலீசார், அம்பர்கிரீஷை பறிமுதல் செய்து காரில் வந்த விருதுநகர் மாவட்டம் வடமலைக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த தங்கபாண்டி, ஆமத்தூர் பகுதியை சேர்ந்த தர்மராஜ், திங்கள்சந்தை பகுதியை சேர்ந்த கிங்ஸ்லி, சூலக்கரை பகுதியை சேர்ந்த மோகன், தூத்துக்குடி மாவட்டம் பேய்க்குளம் அருகேயுள்ள ஆசிர்வாதபுரத்தை சேர்ந்த ராஜன் மற்றும் வாகன ஓட்டுநர் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த கருப்பசாமி உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 25 கிலோ எடையுள்ள அம்பர்கிரீசை பறிமுதல் செய்தனர். இதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.25 கோடியாகும்.