சென்னை: மாருதி சுசூகி நிறுவனம், கார்களின் விலையை உயர்த்தி அறிவித்துள்ளது. அடுத்த மாதம் இது அமலுக்கு வருகிறது. இதுகுறித்து மாருதி சுசூகி நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: எலக்ட்ரானிக் உதிரிபாகங்கள் பற்றாக்குறையால், வாகன உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டது. இதை குறைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன. மேலும், நிர்வாக செலவுகளை குறைக்க அதிகபட்ச முயற்சிகள் மேற்கொண்டாலும், பண வீக்கம், ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்தல் போன்ற காரணங்களால் 2023 ஜனவரி முதல் வாகனங்களின் விலையை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாடலுக்கு ஏற்ப விலை மாறுபடும்.
வாகன விற்பனை அதிகரித்துள்ள நிலையில், மின்சார உதிரிபாகங்கள் பற்றாக்குறையால் உள்நாட்டு மாடல்களின் உற்பத்தி பாதிப்பு போன்ற காரணங்களால் விலையை உயர்த்தும் முடிவு எடுக்கப்பட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த நவம்பரில், மாருதி சுசூகி வாகன விற்பனை 1,59,044 ஆக உள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 17,473 யூனிட்களாக இருந்த மினி கார்களின் (ஆல்டோ, எஸ்-பிரஸ்ஸோ) விற்பனை 18,251 ஆக உயர்ந்துள்ளது. காம்பாக்ட் பிரிவில் (ஸ்விப்ட், செலிரியோ, இக்னிஸ், பலேனோ மற்றும் டிசையர்) 72,844 ஆகவும், பயன்பாட்டு வாகனப் பிரிவில் (விட்டாரா, பிரஸ்சா, எஸ்-கிராஸ், எர்டிகா) விற்பனை இந்த ஆண்டு நவம்பரில் 32,563 ஆக உயர்ந்துள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.