பாலக்காடு : மலம்புழா, தோணி பகுதிகளில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்யும் காட்டு யானையை பிடித்து அடைப்பதற்கு வயநாட்டில் பராமரிப்பு கூண்டு தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் மலம்புழா, தோணி, அகத்தேத்தரை ஆகிய மக்கள் நடமாட்டம் உள்ள பகுதிகளில் பி.டி செவன் என பெயரிடப்பட்ட காட்டுயானை ஊருக்குள் புகுந்து பயிர்களை துவம்சம் செய்து வருகிறது.
காட்டு யானையை வனத்துறை காவலர்கள் விரட்டினாலும் மீண்டும் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றது. இதனை பிடிப்பதற்கு கும்கிகளை வரவழைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் அகத்தேத்தரை, தோணி, ரயில்வே காலனி மற்றும் மலம்புழா ஆகிய பல்வேறு இடங்களில் காட்டு யானை நடமாட்டம் காணப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலையில் முடங்கி கிடக்கின்றனர். மேலும் அன்றாட இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் வேலைக்கு செல்லமுடியாமலும், மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்ல முடியாமலும் பரிதவித்து வருகின்றனர்.
தற்போது காட்டு யானை தோணி பகுதியில் முகாமிட்டுள்ளது. இதையடுத்து வனத்துறை ஊழியர்கள் பட்டாசுகள் வெடித்தும், டிரம் சவுண்ட் அடித்தும், தீப்பந்தங்கள் ஏந்தியும் கண்காணித்து வருகின்றனர். மேலும் கும்கிகள் உதவியுடன் யானையை பிடித்து மயக்கி ஊசி செலுத்தி வயநாடு மாவட்டம் முத்தங்கா காட்டுப்பகுதியில் விடவும் வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இதையடுத்து யானை பிடிபட்டால், முன்னதாக வயநாடு மாவட்டம் முத்தங்காவிலுள்ள யானைகள் பராமரிப்பு முகாமில் தற்காலிகமாக விடுவதற்கு அனைத்து முன்னேற்பாடு நடவடிக்கைகளையும் வனத்துறையினர் கையாண்டுள்ளனர். முத்தங்கா முகாமில் அடைப்பதற்காக கூண்டும் தயார் நிலையில் அமைக்கப்பட்டுள்ளது என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.