நாகர்கோவில் : வடக்குகோணம் பகுதியில் அனந்தனார் கால்வாய் தடுப்பு சுவர் இடிந்து மண் சரிவு ஏற்பட்டுள்ளது. குமரி மாவட்ட கால்வாய்களை, கோடைகாலங்களில் தூர்வாரி முறையாக செப்பனிட வேண்டும் என தொடர்ந்து விவசாயிகள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் பல்வேறு இடங்களில் கால்வாய்கள் புதர்மண்டியும் உடைந்தும் காணப்படுகின்றன.
அனந்தனார் கால்வாயில் பல்வேறு இடங்களில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. நாகர்கோவில் மாநகராட்சி எல்லைக்குள் பார்வதிபுரம், ஆசாரிபள்ளம் அனந்தன்பாலம், வடக்கு கோணம் வழியாக அனந்தனார் கால்வாய் ஓடுகிறது. கால்வாய் கரையோர சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ராஜாக்கமங்கலம், வட்டக்கரை உள்பட பல்வேறு இடங்களில் இருந்து ஆசாரிபள்ளம் மருத்துவக்கல்லூரிக்கு செல்லும் ஆம்புலன்ஸ்கள் வடக்கு கோணம் கால்வாய்கரை சாலையை பயன்படுத்தி வருகின்றன. இதுபோல் கனரக வாகனங்கள், இஸ்ரோ குடியிருப்புக்கு செல்லும் வாகனங்களும் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றன.
இதில் வடக்கு கோணம் கிறிஸ்தவ ஆலயத்திற்கு முன்பகுதியில் கால்வாய் தடுப்பு சுவர் இடிந்துள்ளது. சமீபத்தில் பெய்த மழையால் மேலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து மண் சரிவு ஏற்பட்டு வருவதால், சாலையும் சேதமடையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்காமல் இருக்கும் வகையில் கால்வாய் கரையோரம் பேரிகார்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இந்த சாலை வாகன போக்குவரத்து அதிகம் உள்ள சாலை என்பதால் கால்வாய்கரையில் ஏற்பட்டுள்ள உடைப்பை பொதுப்பணித்துறை நிர்வாகம் சரிசெய்து தடுப்பு சுவர் கட்டிதரவேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.