×

வணிகர் நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வந்த அரசுக்கு நன்றி: வணிகர் சங்கங்களின் பேரமைப்பு பொதுக்குழுவில் தீர்மானம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் 2022 ம் ஆண்டிற்கான பொது குழு கூட்டம் நேற்று  முன் தினம் கோயம்புத்தூரில் பேரமைப்பின் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் நடைபெற்றது. இந்த பொது கூட்டத்தில் பேரமைப்பின் புதிய கொடி அறிமுகம் செய்யப்பட்டது

மேலும்,பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:  உணவுப்பாதுகாப்புத்துறை உரிமம் ஆயுள் உரிமமாக மாற்றிடவும், சட்டங்களில் உள்ள குறைபாடுகளால் ஏற்படும் அதிகார அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திடவும், உணவுப் பொருள் தயாரிப்பு விநியோக உரிமங்களில் உள்ள குறைபாடுகளை களைந்திடவும் குறிப்பாக ஆண்டு விற்று வரவு வருமானவரிச் சான்று முதலானவற்றை வற்புறுத்தக்கூடாது என பேரமைப்பு சார்பில் வலியுறுத்துகிறோம்.

தமிழக அரசு தங்கள் தலைமையில் பொறுப்பேற்று, வணிகர்நல வாரியத்தை செயல்பாட்டுக்கு கொண்டுவந்தமைக்கு நன்றி. மேலும், முழுமையான வணிகர்நல வாரிய உறுப்பினர்கள் நியமனத்துடன், செயல்பாட்டிற்கு கொண்டுவர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டணம், சொத்துவரி உயர்வு பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் மத்தியில் பரவலான அதிருப்தியை உருவாக்கியுள்ளதால் அதனை மறு பரிசீலனை செய்திட பேரமைப்பு வலியுறுத்துகின்றது.

தமிழகத்தில் டிஜிட்டல் பேனர் தொழிலில் ஈடுபட்டுள்ள சுமார் 6 லட்சம் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, மாநகராட்சி, நகராட்சி மற்றும் பஞ்சாயத்துக்களில் குறிப்பிட்ட இடங்களை தேர்வு செய்து பேனர்கள் வைக்க முன்அனுமதி வழங்கி வரைமுறைப்படுத்தி அதற்கான உரிமங்களை பெற எளிய நடைமுறையை வகுத்திட வேண்டுகிறோம்.

கலைஞர் ஆட்சிக்காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி, கங்கைகொண்டான் தூத்துக்குடி மாவட்டம் நாசரேத், போன்ற பகுதிகளில் துவங்கப்பட்ட தொழில் பூங்காக்களை உடனடியாக செயல்பாட்டிற்கு கொண்டு வர தமிழக அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

Tags : Government ,Merchants' Welfare Board ,Confederation of Merchants' Associations , Thanks to the Government for operationalizing the Merchants' Welfare Board: Resolution in the General Assembly of the Confederation of Merchants' Associations
× RELATED மாதவரம், மணலி ஏரியில் நாளை படகு சவாரி துவக்கம்