சென்னை: என். ஐ.ஏ. பெயரில் ரூ. 2 கோடிக்கு மேல் பணம் பறித்த வழக்கில் சரணடைந்த 6 பேருக்கும் 6 நாள் போலீஸ் காவல் விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை முத்தியால்பேட்டை மலையப்பன் தெருவில் ராமநாதபுரத்தை சேர்ந்த ஜமால் என்பவர், வீடு எடுத்து வசித்து வருகிறார். கடந்த 13ம் தேதி ஜமால் வீட்டிற்கு வந்த ஒரு கும்பல் தங்களை என்.ஐ.ஏ அதிகாரிகள் என அறிமுகப்படுத்திக் கொண்டு கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக சோதனை நடத்த வந்துள்ளதாக கூறியுள்ளனர். மேலும் சோதனை என்ற பெயரில் போலி என்ஐஏ அதிகாரி போர்வையில் 20 லட்சம் ரூபாயை எடுத்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக, முத்தியால்பேட்டை குற்றப்பிரிவு ஆய்வாளர் இளங்கோ வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தினார். இந்த வழக்கு தொடர்பாக மண்ணடியை சேர்ந்த பா.ஜ.மத்திய சென்னை பட்டியலின அணி நிர்வாகியான வேலு (எ) வேங்கை அமரன் உள்பட 6 பேர் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக சரணடைந்த 6 பேரும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். இந்த 6 பேரையும் 10நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி போலீசார் மனுதாக்கல் செய்துள்ளனர்.
பா.ஜ.க நிர்வாகி வேங்கைஅமரன், அவரது கூட்டாளிகள் 6 பேரை நீதிமன்றத்தில் காவல்துறை ஆஜர்படுத்தியது. பணத்தை மீட்கவும், 6 பேரையும் காவலில் விசாரிக்க போலீஸ் முடிவு செய்துள்ளது. தற்போது 6 பேருக்கும் 6 நாள் போலீஸ் காவல் விதித்து ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.