×

சைதாப்பேட்டையில் பயங்கரம் இரும்பு கம்பி திருடிய வாலிபர் அடித்து கொலை; 8 பேர் கைது

சென்னை: சைதாப்பேட்டையில் இரும்பு திருடியதாக கூறி இளைஞர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 8 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சென்னை சைதாப்பேட்டை தாடண்டர் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. கடந்த 19ம் தேதி இரவு சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ஷாயின் ஷா காதர் (23), வினோத் (20), ஹேமநாதன் (20) ஆகிய 3 இளைஞர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்றுள்ளனர். அப்போது 3 பேரும் சேர்ந்து அங்கு கிடந்த இரும்பு கம்பிகளை திருடிக்கொண்டிருந்தனர்.

இதை அங்கு வேலையில் இருந்த கட்டுமான தொழிலாளர்கள் சிலர் பார்த்து கூச்சலிட்டுள்ளனர். இதனால் இளைஞர் ஹேமநாதன் தப்பி ஓடிவிட்டார். ஷாயின்ஷா காதர், வினோத் ஆகியோர் தப்பிக்க முயன்றுள்ளனர். இருப்பினும் கட்டுமான தொழிலாளர்கள் அவர்களை சுற்றி வைத்து பிடித்துள்ளனர். அப்போது, அங்கிருந்த பொதுப்பணித்துறை பொறியாளர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோர் ஷாயின்ஷா காதர் மற்றும் வினோத்தை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இந்த தாக்குதலில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரின் பெற்றோருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த இளைஞர்களின் உறவினர்கள் மற்றும் பெற்றோர் நடந்த விஷயங்களை கேட்டறிந்தனர்.

மேலும் அவர்களை காவல்துறையினரிடம் ஒப்படைக்கப் போவதாக பொறியாளர்களும், கட்டுமான தொழிலாளர்களும் கூறியதை அடுத்து பயந்துபோன பெற்றோர் இளைஞர்களை விட்டுவிடும்படி கேட்டுக்கொண்டனர். அப்போது, அவர்களை வீட்டுக்கு அழைத்து செல்ல முயன்றபோது, அங்கேயே ஷாயின்ஷா காதர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஷாயின்ஷா காதரின் உடலை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே, அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து, சைதாப்பேட்டை உதவி ஆணையர் கிறிஸ்டின் ஜெயசீல், காவல் ஆய்வாளர் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர்.

பின்னர் உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், படுகாயமடைந்த வினோத் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கட்டுமான பொறியாளர் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டையில் இரும்பு கம்பி திருடிய வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Saidapet , A teenager who stole iron wire was beaten to death in Saidapet; 8 people were arrested
× RELATED சென்னை சைதாப்பேட்டை பாத்திமா பள்ளி...