சான் பிரான்சிஸ்கோ: சமூக ஊடகமான டுவிட்டரை வாங்கிய உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க், அவ்வப்போது பரபரப்பு பதிவுகளையும், நடவடிக்கைகளையும் எடுத்து சர்ச்சையை ஏற்படுத்தி வந்தார். இந்த நிலையில் நேற்று, ‘டுவிட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து விலக வேண்டுமா? என்ற கேள்விக்கு ஆம் அல்லது இல்லை என்று வாக்களிக்க வேண்டும்’ என்று டுவிட்டர் பயனர்களை கேட்டுக் கொண்டார். மேலும் அடுத்த 12 மணிநேர வாக்கெடுப்பின் முடிவுகளின் அடிப்படையில் எனது நடவடிக்கை இருக்கும் என்றும் தெரிவிருத்திருந்தார்.
அதன் தொடர்ச்சியாக ‘எலான் மஸ்க் டுவிட்டரின் தலைவர் பதவியில் இருந்து விலக வேண்டும்’ என்று 12 மணி நேர வாக்கெடுப்பில் பதிவான 17.5 மில்லியன் வாக்குகளில், 57.5 சதவிகிதம் பேர் வாக்களித்து இருந்தனர். மேலும், 42.5 சதவிகிதம் பேர் அவர் அதே பதவியில் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்று வாக்களித்தனர். வாக்கு எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் பெரும்பாலானோர் எலான் மஸ்க்கை பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியதால், அவர் விரைவில் தலைவர் பதவியில் இருந்து வெளியேறுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.