நெல்லை: நெல்லை பேட்டை அருகேயுள்ள சுத்தமல்லியை சேர்ந்தவர் பிரபு (35), இவர் திருநங்கை ஆவார். இவர், நேற்று முன்தினம் படுகாயத்துடன் நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள திட்டங்குளத்தை சேர்ந்த லாரி டிரைவர் ரமேஷ்குமார் (45) என்பவரை கைது செய்தனர். போலீசில் அவர் அளித்துள்ள வாக்குமூலம்: நான் நேற்று முன்தினம் கோவில்பட்டியிலிருந்து - நாகர்கோவிலுக்கு சரக்குகளை லாரியில் கொண்டு சென்றேன்.
வழியில் பாளையங்கோட்டை பெருமாள்புரம் ரெட்டியார்பட்டி அருகே நான்கு வழிச்சாலையில் லாரியை நிறுத்தினேன். அப்போது அங்குள்ள கடையில் டீக்குடித்தேன். பின்னர் அங்கு தனியாக நின்ற இளம்பெண்ணிடம் பாலியல் ஆசையில் நெருங்கி தனிமையில் இருந்தேன். அப்போதுதான் அவர் பெண் வேடமிட்ட திருநங்கை என தெரியவந்தது.இதனால் அவர் மீது எனக்கு ஆத்திரம் ஏற்பட்டது. மேலும் லாரி வாடகை ரூ.12 ஆயிரத்தை திருடி விட்டு என்னிடம் தராமல் தாக்கினார்.
இதனால் ஆத்திரமடைந்த நான் சுத்தியலால் அவரை சரமாரியாக தாக்கினேன். அப்போது மயங்கிய அவரை சாலையோரத்தில் வீசி விட்டு தப்பிச் சென்றேன். இவ்வாறு அவர் வாக்குமூலம் அளித்ததாக போலீசார் தெரிவித்தனர். பின்னர் போலீசார் ரமேஷ்குமாரை பாளை. மத்திய சிறையில் அடைத்தனர்.