சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக முதல்வரால் துவங்கப்பட்ட திறன் மேம்பாட்டிற்கான முன்னெடுப்பே “நான் முதல்வன்” திட்டம். இத்திட்டம் நம் மாநிலத்தில் ஆண்டுக்கு 12 லட்சம் இளைஞர்களுக்கு முன்னேற்றத்திற்கான மாற்றத்தினை தரும் திறன்களை வழங்கும் நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றது. நான் முதல்வன் திட்டத்தின் கீழ் துவங்கப்பட்ட இணைய தளத்தில் இலவச படிப்புகள், குறைவான கட்டணத்துடன் கூடிய படிப்புகள் மற்றும் பாடத் திட்டத்துடன் கூடிய படிப்புகள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ‘நான் முதல்வன்’ திட்டமானது பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பாலிடெக்னிக், அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், பள்ளிகள் மற்றும் துணை மருத்துவ படிப்புகளை உள்ளடக்குகிறது.
நான் முதல்வன் திட்டத்தின் முக்கிய நோக்கம், அரசு மற்றும் தனியார் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நிறுவனங்களுடன் தொழில்துறையின் தொடர்ச்சியான இணைப்பை எளிதாக்குவதாகும். இதன் அடுத்த நிலையாக தொழில்துறை கூட்டமைப்புகளான தொழில் அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் தானியங்கி வாகனத்துறை, மின்னணுவியல், தகவல் தொழில்நுட்பம், விருந்தோம்பல், ஜவுளி, ஆயத்த ஆடை மற்றும் பல்வேறு துறைகளின் முன்னணி தொழில் வல்லுநர்களுடன் நேற்று கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் திறன் பயிற்சியில் தொழில்துறையை நேரடியாக ஈடுபடுத்தவும், பல்வேறு தொழில் துறைகளில் தொழில் பழகுநர் புதிய பணிவாய்ப்புகளை ஏற்படுத்துவது ஆராய்ச்சி புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கமளித்தல் குறித்து எடுத்த நடவடிக்கைகள் மற்றும் துவங்க வேண்டிய ஆயத்தப்பணிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தின் வாயிலாக தொழில் துறையின் திறன் தேவைக்கேற்ப புதிய திறன் பயிற்சிகள் விரைவில் துவங்கப்படவுள்ளது. 5ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்கள், தொழில் கல்வி பயின்றவர்கள் டிப்ளமோ, பொறியியல் பட்டதாரிகள், கலை மற்றும் அறிவியல் பட்டதாரிகள் மத்திய அரசின் நிதியுதவியுடன் கல்வித் தகுதிக்கேற்ப மாதம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ9 ஆயிரம் வரை செயல்படுத்தப்படும். தொழில் பழகுநர் திட்டத்தில் தமிழக மாணவர்கள் அதிக அளவு சேர்ந்து பயன்படும் வகையில் தொழில் துறையுடன் கலந்தாய்வு செய்யப்பட்டது. இதில் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.