சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: சென்னை தலைமை செயலகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 9ம் தேதி முதல் 15ம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய பெண்கள் சாம்பியன்ஷிப் - 2022 லேசர் பாய்மரப்படகு போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற சென்னையை சேர்ந்த வீராங்கனை நேத்ரா குமணனை பாராட்டி பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வில்வித்தை வீராங்கனை பவானிதேவி மற்றும் டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் சந்தித்தனர்.
இந்த நிகழ்ச்சியின் போது இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பன்னாட்டு அளவிலான போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு ஊக்குவிக்கும் திட்டத்தில் பயனடைந்து வருகின்ற நேத்ரா குமணன் இதுவரையில் அரசு சார்பில் உயரிய ஊக்கத் தொகையாக ரூ.15 லட்சமும், டென்னிஸ் வீரர் ராம்குமார் ராமநாதன் ரூ.49 லட்சமும் தலைசிறந்த விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உதவித் தொகை வழங்கும் திட்டத்தில் பயனடைந்து வருகின்ற வாள்வீச்சு வீராங்கனை பவானிதேவி ரூ.1.98 கோடி வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.