அந்தியூர் : அந்தியூர் அருகே, பெரிய ஏரிக்குள் கோரை புற்களுக்கு நடுவே விடிய விடிய தவித்த மூதாட்டியை ரப்பர் மிதவை மூலம் பத்திரமாக தீயணைப்புத்துறை வீரர்கள் மீட்டனர்.
ஈரோடு மாவட்டம், அந்தியூர் பெரிய ஏரிக்குள் சம்புகோரை புற்களுக்கு இடையே மூதாட்டி ஒருவர் குளிரில் நடுங்கி கொண்டு இருப்பதை அங்கிருந்த பொதுமக்கள் பார்த்தனர். இதையடுத்து இது குறித்து அந்தியூர் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறை வீரர்கள் ஏரியில் இறங்கி மூதாட்டியை ரப்பர் மிதவை மூலமாக பத்திரமாக மீட்டனர். அந்த மூதாட்டி ஏரியின் குளிர்ந்த நீருக்குள் விடிய விடிய இருந்ததால் குளிரில் நடுங்கி கொண்டிருந்தார்.
தொடர்ந்து, தன்னை குறித்த தகவல்களை மூதாட்டி கூற மறுத்துவிட்டார். இதற்கு இடையே சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து, மூதாட்டி தற்கொலை செய்து கொள்ள வந்தாரா? அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவரா ? அவர் எந்த பகுதியை சேர்ந்தவர் என அந்தியூர் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.