×

ரபேல் வாட்ச் விவகாரத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி தமிழக பாஜ தலைவர் மோதல்: டிவிட்டரில் அனல்பறக்கும் கேள்விகள்

சென்னை: ரபேல் வாட்ச் விவகாரத்தில் பாஜ தலைவர் அண்ணாமலை- மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இடையே சமூக வலைதளமான டிவிட்டரில் கடும் வார்த்தை மோதல் ஏற்பட்டுள்ளது. இதை உடனே பதில் அளிக்க முடியாமல் பாஜ தலைவர் அண்ணாமலை மவுனம் காத்து வருகிறார். இவர்களின் டிவிட்டர் மோதல் வைரலாகி வருகிறது. கோவையில் நிருபர்களை சந்தித்த பாஜ தலைவர் அண்ணாமலை, நான் போடும் சட்டை, வேட்டி, கை கடிகாரம், கார் ஆகியவற்றை ஆய்வு செய்கிற போக்கு அதிகரித்து இருக்கிறது. நான் கையில் கட்டி இருக்கும் வாட்ச் ரபேல் விமானத்தின் உதிரி பாகங்களை வைத்து செய்யப்பட்ட சிறப்பு கை கடிகாரம்.

ரபேல் விமானத்தை தயாரித்த நிறுவனம் 500 கை கடிகாரங்களை தயாரித்தது. எனக்கு ரபேல் ஓட்ட கூடிய வாய்ப்பு கிடைக்கவில்லை. எனவே இந்த கைக்கடிகாரத்தை கட்டி இருக்கிறேன் என்றார். இதற்கு டிவிட்டரில் பதிலடி கொடுத்த அமைச்சர் செந்தில்பாலாஜி, ‘‘பிரான்ஸ் நிறுவனத்திற்காக, உலகில் வெறும் 500 கைக்கடிகாரங்கள் மட்டுமே தயாரிக்கப்பட்டு, ரூ.5 லட்சத்துக்கும் மேல் விலையுள்ள ரபேல் வாட்ச் வெறும் 4 ஆட்டுக்குட்டி மட்டுமே சொத்தென சொல்லும் ஆட்டுப்புளுகர் கட்டியிருக்கிறார். அவர் வாங்கின ரசீதை ஒரு மணி நேரத்தில் வெளியிட்டால் எளியவர்களும் வாங்கி மகிழலாம்.

மேலும், வெளிநாட்டு வாட்சை கட்டியிருக்கும் தேசியவியாதி, மன்னிக்க தேசியவாதி, ஆடு வளர்த்து சேர்த்து ரூ.5 லட்சம் ரூபாய் வாட்ச் கட்டும் அளவுக்கு உயர்ந்தது எப்படி. வார்ரூம் வழியாக தொழிலதிபர்களை மிரட்டினால் இப்படியெல்லாம் பணம் கிடைக்குமா.  கடிகாரம் வாங்கிய ரசீதை ஒரு மணி நேரத்திற்குள் வெளியிட முடியுமா. இல்லை வழக்கம்போல excel sheet ஏமாத்து வேலை தான் வருமா என கேள்வி கேட்டிருந்தார். இதற்கு டிவிட்டர் மூலம் அண்ணாமலை விளக்கம் கொடுத்திருந்தார். அவருக்கு பதிலடி கொடுக்கும் வகையில் செந்தில்பாலாஜி மற்றொரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் அமைச்சர் செந்தில்பாலாஜி டிவிட்டரில் பதிவிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சம்பளக்கணக்கை வெளியிடுகிறேன். சாம்பார் கணக்கை வெளியிடுகிறேன் என கம்பி கட்டும் கதைகளை மக்களிடம் சொல்ல வேண்டாம். இவை அனைத்து பல்பு வாங்கிய அரவக்குறிச்சி தேர்தல் மனுவிலேயே இருக்கிறது. இவர் வெளியிடுவதை யார் வேண்டுமானாலும் எடுத்து கொள்ள முடியும்.வேலியில் போகிற ஓணானை வேட்டிக்குள் விட்டுக்கொண்டது போல ரபேல் ஊழலை மீண்டும் மக்களிடம் நினைவூட்டி கதறும் முட்டாள்களிடம் கேட்பது எளிய கேள்விதான். பல லட்சம் மதிப்பு கொண்ட வெளிநாட்டு கடிகாரம் கட்டுவது தேசபக்தியா.

இது தான் நீங்கள் அளந்துவிடும் மேட் இன் இந்தியா வா. தேர்தலுக்குப் பிறகு வாங்கியதாகச் சொல்லிவிட்டால் ‘வேட்பு மனுவில் ஏன் கணக்கு காட்டவில்லை’ என்ற கேள்வியை தவிர்த்துவிடலாம் என ‘புத்திசாலித்தனமாக’ மே 2021ல் வாங்கியதாகச் சொல்லும் அந்த ஐந்து லட்சம் ரூபாய் கடிகாரத்திற்கான பில் இருக்கிறதா அல்லது இனிமேல் தான் தயார் செய்ய வேண்டுமா. இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Tags : Minister ,Senthil Balaji ,Tamil Nadu ,BJP ,Twitter , Minister Senthil Balaji clash with Tamil Nadu BJP chief over Raphael Watch issue: Questions burning on Twitter
× RELATED பண மோசடி வழக்கில் ஜாமின் கோரிய...