செங்கோட்டை: தமிழக - கேரள எல்லையில் அமைந்துள்ள அச்சன்கோவில் தர்மசாஸ்தா ஐயப்ப சுவாமி கோயிலில், ஆண்டுதோறும் 10 நாட்கள் மகோற்சவ திருவிழா நடைபெறும். இந்தாண்டுக்கான திருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஐயப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனைக்கு பிறகு காலை 10 மணிக்கு பிரகார கொடிமரத்தில் செங்குன்றம் தாமமன் மடம் பிரம்ம ஸ்ரீகண்டரர் மோகனன் கொடியேற்றி உற்சவ விழாவைத் துவக்கிவைத்தார். அப்போது வானில் கருடசேவையை பக்தர்கள் தரிசித்தனர்.
திருவிழாவில் இன்று (18ம் தேதி) மற்றும் 20ம் தேதியில் உற்சவ வாரி வைபவம், 4ம் நாளான வரும் 21ம் தேதி சிறப்பு அபிஷேகம், மகா அலங்கார தீபாராதனை நடைபெறும். 5, 6 மற்றும் 7ம் நாள் திருவிழாவில் கருப்பன் துள்ளல் இடம்பெறும். 9ம் நாளான 25ம் தேதி சுமார் 50 அடி நீளம் கொண்ட மூங்கிலை கட்டி நடைபெறும் தேரோட்ட வைபவம் சிறப்பு வாய்ந்தது. இதைத்தொடர்ந்து 26ம் தேதி ஆராட்டு விழா கோலாகலமாக நடக்கிறது. ஐயப்பன் தலங்களிலேயே 10 நாட்கள் திருவிழா நடப்பது சபரிமலையிலும், அச்சன்கோவிலிலும் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.