மதுராந்தகம்: மதுராந்தகம் பெரிய ஏரி தூர்வாரும் பணிகளை தலைமைச் செயலாளர் இறையன்பு இன்று ஆய்வு செய்தார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் பெரிய ஏரி 2600 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஏரியை தூர்வாரி சீரமைக்கவேண்டும் என்று கடந்த 20 வருடங்களுக்கு மேலாக விவசாயிகளும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துவந்தனர். இந்தநிலையில், பெரிய ஏரியை தூர்வாரி சீரமைக்க 122 கோடி ரூபாயை தமிழக அரசு ஒதுக்கியது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் தூர்வாரும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருகின்ற 2024ம் ஆண்டு ஜூலை மாதம் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு இன்று காலை மதுராந்தகத்துக்கு வந்தார். பின்னர் அவர், பெரிய ஏரி தூர்வாரும் பணிகளை பார்வையிட்டார். களங்கல் பகுதி மற்றும் ஏரிக்கரையோரம் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்து, பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். ஏரியில் வைக்கப்பட்டுள் வரைபடம் மூலம் தூர்வாரும் பணிகள் குறித்து தலைமைச் செயலாளருக்கு அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத் மற்றும் பொதுப்பணித்துறை உயரதிகாரிகள் இருந்தனர்.