பூந்தமல்லி: மதுரவாயல் அருகே வாலிபரிடம் செல்போன் பறித்த இரட்டை சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (21). இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டின் அருகில் நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்கு பைக்கில் வந்த 2 பேர், மணிகண்டன் வைத்திருந்த செல்போனை பறித்துகொண்டு மின்னல் வேகத்தில் தப்பினர்.
இதுகுறித்து மதுரவாயல் போலீசாரிடம் மணிகண்டன் புகார் செய்தார். போலீசார், செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர்களை தீவிரமாக தேடி வந்தனர். இந்தநிலையில் நேற்று செல்போன் பறிப்பில் ஈடுபட்டதாக போரூரை சேர்ந்த சஞ்சீவ் (20), சஞ்சய் (20) ஆகிய இரட்டை சகோதரர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களிடமிருந்து பைக், செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இவர்கள் இருவர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.