சேலம்: சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் ஸ்டேசனுக்கு சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் நேற்று காலை 11 மணி அளவில் பதற்றத்துடன் அழுது கொண்டே வந்தார். அவர் இந்தியில் பேசியதால், இந்தி தெரிந்த ஒருவரை அழைத்து வந்து விசாரித்தனர். அப்போது அந்த வாலிபர் தன்னை கடத்திச்சென்று கேரளாவில் விற்பனை செய்ய அழைத்துச் செல்வதால் அவர்களிடம் இருந்து தப்பி வந்ததாக தெரிவித்தார். நேபாளத்தை சேர்ந்த 5 பேர் ஓட்டல் வேலைக்கு கேரளாவுக்கு ரயிலில் சென்றுள்ளனர். அப்போது இவரை அழைத்துச் சென்றவர்கள், கேரளாவில் பெரும் தொகைக்கு விற்பனை செய்துவிட வேண்டும் என்று கூறியுள்ளனர். இதனை கேட்ட இந்த வாலிபர், ரயில் சேலம் வந்தபோது, இறங்கி வெளியே ஓடிவந்தது தெரிந்தது. ரயிலில் சொந்த ஊருக்கு அனுப்ப போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.