கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை அரசு பள்ளி சுவர்களில் வண்ண, வண்ண ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. மேலும் கல்வியாளர்களின் பொன்மொழிகளும் இடம் பெற்றுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி புதுக்கோட்டை- தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது. பள்ளிக்கு எதிர்புறம் தனியார் ஆக்கிரமிப்பு செய்த நிலையில் பள்ளி நுழைவாயில் மட்டுமே இருந்தது. சாலையில் பள்ளிக்கூடம் இருப்பதே எவருக்கும் தெரியாத வண்ணம் தனிநபர் ஆக்கிரமிப்புகள் இருந்தது.
இதனால் மாணவ, மாணவிகளுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையூறாக இருந்த நிலையில், புதியதாக தலைமை ஆசிரியராக பொறுப்பு ஏற்ற விஜயலெட்சுமி பள்ளியின் மேலாண்மை குழுவை கூட்டி பள்ளி ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். பள்ளிக்கு கூடுதல் குழந்தைகளை சேர்க்க பெற்றோர் பரிந்துரை செய்ய வேண்டும். தனியார் பள்ளிக்கு மேலாக நமது பள்ளியை செயல்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார். பள்ளி மேலாண்மை குழு ஆதரவுடன் மாவட்ட கலெக்டரிடம் பள்ளியின் ஆக்கிரமிப்புகளை அகற்றி தர வேண்டும் என கோரிக்கை மனு அளித்தார்.
இதையடுத்து கலெக்டர் கவிதா ராமு உடனே ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டார். கலெக்டர் உத்தரவின் பேரில் தாசில்தார் ராஜேஸ்வரி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றினார். தொடர்ந்து தலைமை ஆசிரியை விஜயலட்சுமி பள்ளியின் சுற்று சுவருக்கு வர்ணம் பூசி சுவற்றில் கல்விக்கண் திறந்த பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜ் ,பெண்ணுரிமைக்கு குரல் கொடுத்த கவிஞர் மகாகவி பாரதியார், உலகப் பொதுமறை இயற்றிய திருவள்ளுவர், இளைஞர்களின் எழுச்சி நாயகன் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் ,பாவேந்தர் பாரதிதாசன் ஆகியோரின் ஓவியங்களை சுவர்களில் வரைந்தும்,இவர்கள் கூறிய பொன்மொழிகளை சுவற்றில் எழுதியும் உள்ள நிலையில் தற்சமயம் பள்ளியை பார்ப்பவர்கள் கண் கவரும் வண்ணம் உள்ளது.