புதுச்சேரி: புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மாநிலத்தின் அனைத்து கட்சிகளின் கோரிக்கையாகும். இந்த சூழலில் ஆளும் கட்சியாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கி ஆதரவு அளிக்கும் சுயேட்சை எம்.எல்.ஏ.நேரு தலைமையில் 60 அமைப்புக்கள் ஆலோசனையில் ஈடுபட்டன. இந்த அமைப்புகள் கையெழுத்திட்ட கோரிக்கை மனுவை சட்ட பேரவையில் முதலமைச்சரிடம் அந்த அமைப்பினர் அளித்தனர். அதை பெற்று கொண்ட முதலமைச்சர் என்.ரங்கசாமி மாநில அந்தஸ்து இல்லாததால் பல விஷயங்களை செய்ய முடியாத நிலை உள்ளது என்றார். இதனால், அதிகமான மனஉளைச்சல் தான் ஏற்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
பலமுறை கேட்டும் ஒன்றிய அரசு செவி சாய்க்கவில்லை என்று என்.ரங்கசாமி தனது வேதனையை கொட்டியுள்ளார். தற்போது புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி மீது அப்போதைய முதலமைச்சர் நாராயணசாமி பல்வேறு குற்றச்சாட்டுகளை வைத்தார். தற்போது திடீரென ரங்கசாமியும் குரலை உயர்த்தியுள்ளார். இது வெறும் நாடகம் என்று கூறியுள்ள திமுக எம்.எல்.ஏ.சிவா மாநில அந்தஸ்து கோரி எந்த முயற்சியையும் ரங்கசாமி எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.