சென்னை: சார்ஜாவில் இருந்து கல்ப் ஏர்வேஸ் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில் கென்யா நாட்டை சேர்ந்த மேரி முதோனி (32) சுற்றுலா விசாவில் சார்ஜா வழியாக சென்னை வந்திருந்தார். அவரை சுங்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அப்போது மருத்துவ சிகிச்சைக்காக வந்திருப்பதாக கூறினார். ஆனால், அதற்கான சான்றிதழ்கள் முதோனியிடம் இல்லை. அவரது உடமையிலும் எதுவும் இல்லை. இருப்பினும் மிகவும் பதற்றத்துடனேயே அவர் காணப்பட்டார். சுங்க அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் விமான நிலைய மருத்துவமனைக்கு அவரை அழைத்து சென்றனர். மேரி முதோனியை எக்ஸ்ரே எடுத்தனர்.
அப்போது அவருடைய வயிற்றுக்குள் ஏராளமான கேப்சூல்கள் விழுங்கி வந்திருப்பது தெரியவந்தது. அவரை 2 நாட்களாக மருத்துவமனையில் வைத்து, இனிமா கொடுத்து கொஞ்சம் கொஞ்சமாக வயிற்றுக்குள் இருந்த கேப்சூல்களை முழுமையாக வெளியில் எடுத்தனர். முதோனி வயிற்றில் 90 கேப்சூல்கள் இருந்தன. அதற்குள் 902 கிராம் ஹெராயின் போதைப்பொருள் இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு ரூ. 6.31 கோடி. இதையடுத்து முதோனயை கைது செய்தனர். ஆனால், சர்வதேச போதை கடத்தும் கும்பலை சேர்ந்தவர் என்பது தெரிய வருகிறது.