சென்னை: பாமக தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: மதுரை திருமங்கலம் அருகே பொறியியல் கல்லூரி மாணவர் வினோத்குமார் ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். சாதிக்க வேண்டியவர்களை ஆன்லைன் ரம்மி சாகடித்துக்கொண்டிருக்கிறது. மேலும், ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்பட வேண்டியதுதான் என்பதை அனைவரும் ஏற்றுக் கொள்கின்றனர். இருப்பினும் அது இன்னும் தடை செய்யப்படாததால் ஒன்றரை ஆண்டுகளில் 38 பேர் உயிரிழந்துள்ளனர். அவசர சட்டம் காலாவதியான பின்னர் 16 நாட்களில் 6 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளை தடுக்க வேண்டிய கடமை அரசுக்கு எந்த அளவுக்கு உள்ளதோ, அதே அளவிற்கு அரசின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க வேண்டியது ஆளுநரின் கடமை. அதை உணராமல் தற்கொலைகளை ஆளுநர் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையளிக்கிறது. ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டத்தை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி விட்டதுடன் கடமை முடிந்து விட்டதாக நினைத்து அரசு அமைதியாக வேடிக்கை பார்க்கக் கூடாது. ஆளுநரின் ஒப்புதலை பெறுவதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும்.