குமாரபுரம்: தக்கலை அருகே பியூட்டிஷியன் படிப்பை நிறுத்த மறுத்த மனைவியை டெம்போ டிரைவர் சரமாரி வெட்டி கொலை செய்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அடுத்த அழகியமண்டபம் அருகே தச்சகோடு பகுதியை சேர்ந்தவர் எபனேசர் (35). சொந்தமான டெம்போ ஓட்டி வருகிறார். இவரது மனைவி ஜெப பிரின்ஷா (31). இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். ஜெப சோபன் (14), ஜெப ஆகாஷ் (13) என்ற 2 மகன்கள் உள்ளனர். ஜெப பிரின்ஷா, திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பியூட்டிஷியன் படித்து வந்தார். கடந்த 3 மாதங்களுக்கு முன்தான் இந்த பயிற்சி வகுப்பில் சேர்ந்தார். ஒரு வருட பயிற்சி வகுப்பாகும்.
ஜெப பிரின்ஷாவின் தந்தை ஜெபசிங். இவர், மகளை நெய்யூர் ரயில் நிலையத்தில் அழைத்து சென்று விடுவார். அங்கிருந்து ெஜப பிரின்ஷா ரயிலில் திருவனந்தபுரம் செல்வார். பின்னர் மாலையில் கணவர் எபனேசர் வீட்டுக்கு அழைத்து வருவார். பியூட்டிஷியன் படிப்புக்கு சென்ற பின், ஜெப பிரின்ஷா உடைகள் அணிவதிலும் மாற்றம் ஏற்பட்டது. எபனேசர் கண்டித்தார். மேலும் பியூட்டிஷியன் படிப்புக்கு செல்ல வேண்டாம் என கூறியுள்ளார்.
அதற்கு ெஜப பிரின்ஷா, ‘ஒரு வருட படிப்புதான். அதை முடித்து விட்டால், சொந்தமாக பியூட்டி பார்லர் வைக்கலாம்’ என கூறியுள்ளார். இதனால் தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டது. மாலையில் அழைத்து வர எபனேசர் செல்வதில்லை. இதனால் ெஜப பிரின்ஷா, மூலச்சல் பன்றிவெட்டான் பாறைவிளை பகுதியில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விடுவார். பின்னர் இரவில் குழந்தைகள் டியூஷன் முடிந்து வந்ததும் மீண்டும் தனது வீட்டுக்கு ஜெப பிரின்ஷா வருவார்.
இந்நிலையில் ஜெப பிரின்ஷாவின் சகோதரர் திருமண பேச்சுவார்த்தை நடந்தது. இது தொடர்பாக மாமனார் வீட்டுக்கு ஜெப பிரின்ஷாவுடன் எபனேசர் சென்றார். பேச்சுவார்த்தை முடிந்ததும் இரவு 11 மணியளவில் ஜெப பிரின்ஷாவும் எபனேசரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அப்போது, அரிவாளை மறைத்து வைத்துள்ளார் எபனேசர். தக்கலை அருகே உள்ள பரைக்கோடு சாலையில் இருட்டான பகுதியில் செல்லும் போது தகராறு ஏற்பட்டுள்ளது.
ஆத்திரமடைந்த எபனேசர், மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரமாரியாக வெட்டினார். தலையில் பலத்த காயமடைந்த ஜெப பிரின்ஷா ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவ்வழியாக வேனில் வந்தவர்கள் இதை பார்த்து அலற, எபனேசர் ஓட்டம் பிடித்தார். ரத்த வெள்ளத்தில் கிடந்த ஜெப பிரின்ஷாவை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். ஆனால் சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்தார்.
தகவலறிந்து தக்கலை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜெப பிரின்ஷா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தலைமறைவான எபனேசர் திருவனந்தபுரத்தில் இருப்பதாகவும், அவர் தற்கொலைக்கு முயன்று அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து தனிப்படை போலீசார் விரைந்துள்ளனர். விசாரணைக்கு பிறகே இது தொடர்பாக உறுதியாக கூற முடியும் என போலீசார் தெரிவித்தனர்.